Tuesday 24 June 2014

கம்பியிலும் வந்துவிட்டது ரெடிமேட்

கம்பியிலும் வந்துவிட்டது ரெடிமேட்



பழைய கட்டிடங்களில் சிறப்பைப் பற்றி நாம் வியந்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்குப் பல காலம் ஆகும். இப்போது அதே உறுதியுடன் குறைந்த கால அவகாசத்தில் கட்டிடங்களை மிக விரைவாகக் கட்டிவிட முடியும் அதுவும் முன்பைவிட குறைந்த விலையில். அவ்வளவு புதிய புதிய தொழில்நுட்பங்கள் கட்டுமானத் துறையில் அறிமுகமாகி வருகின்றன. இம்மாதிரியான ஒரு தொழில்நுட்பம்தான் ரெடிமேட் ஸ்டீல். இவ்வகை தொழில்நுட்பம் சமீபத்தில் வெற்றிகரமாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரெடிமேட் சிமெண்ட் கலவை குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். “Ready Mix Concrete Cement’ என்ற பெயரில் நகரத்தில் அடிக்கடி தென்படும் வாகனத்தையும் நாம் பார்த்திருப்போம். பழைய காலத்தைப் போல சிமெண்ட்டையும் மண்ணையும் சரியான விகிதத்தில் கலந்து, பின் அதைப் பில்லரில் ஊற்றிப் பூச வேண்டும். இது ஒன்றும் இத்தனை எளிய காரியம் அல்ல. அதற்கு முன்பு ஆற்று மணலைத் தெளிக்க வேண்டும். தெளித்த மணலை அள்ளி சிமெண்ட்டுடன் நீர் ஊற்றிக் குழைக்க வேண்டும். குழைத்ததை அள்ளி எடுத்துச் செல்ல ஒருவர் வேண்டும். இப்படி அதிக மனித உழைப்பையும், காலத்தையும் கோரும் வேலைகளுக்கு மாற்றாக ரெடி மிக்ஸ் சிமெண்ட் வந்தது. இது முக்கியமாகப் பெரிய கட்டிடங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கிறது.
இந்த மாதிரி தேவையில்லாத வேலையாட்களையும் காலத்தையும் குறைக்கும் பொருட்டு வந்துள்ள தொழில்நுட்பம்தான் ரெடிமேட் ஸ்டீல். பொதுவாக இன்றைக்குள்ள கட்டிடங்களுக்கு ஆதாரமாக இருப்பது கான்கிரீட்தான். இந்த கான்கிரீட்டின் ஆதாரத்திற்கு அடிப்படை கட்டுமானக் கம்பிகள்தாம். இந்தக் கம்பிகளைக் கட்டுவது அதிக உழைப்பையும் காலத்தையும் எடுக்கும் வேலை. முதலில் கட்டுமானத்திற்கான இரும்புக் கம்பிகளை வாங்கி வந்து கட்டிடத்திற்கு ஏற்றவாறு அதை வெட்டி, வளைத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்குள்ள இட நெருக்கடியில் இந்த மாதிரி வேலைகளுக்கு இடவசதி தேவைப்படும். இரண்டாவது கம்பிகளைக் கொண்டுவந்து சேர்க்க, அவற்றை வளைத்துக் கட்டவும் ஆட்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள். இந்த மாதிரியான சிக்கல்கள் ஏதும் இல்லாமல் மிக எளிதாகக் கம்பிகளைக் கட்ட இந்தப் புதிய தொழில்நுட்பம் பயன்படுகிறது.
“கட்டுமானத்திற்குரிய விவரங்களை அதாவது Bar Bending Scheduleஐ எங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டால் அதற்குத் தகுந்தவாறு கம்பிகளை நாங்களே வளைத்து கட்டிடப் பணிகள் நடைபெறும் இடத்திற்கே அனுப்பிவிடும். அதை அப்படியே இறக்கி சிமெண்ட் கலவைகளை இட்டாலே போதுமானது” என்கிறார் ஜிகேஎஸ் ரெடிமேட் ஸ்டீல்ஸ் என்ற பெயரில் ரெடிமேட் ஸ்டீல்களை உருவாக்கிவரும் வாசுதேவன்.
இந்தத் தொழிலில் ஆறு ஆண்டு காலமாகச் செயல்பட்டுவரும் வாசுதேவன் இதற்காக மென்பொருட்களை உபயோகித்து கம்பிகளைத் தேவைக்கு ஏற்ப நுட்பமாகவும் கச்சிதமாகவும் உருவாக்கிவருவதாகச் சொல்கிறார். “இந்த முறையின் மூலம் கட்டிடச் செலவை ஓரளவு குறைக்க முடியும். பழைய முறைப்படி கட்டிடப் பணிகள் நடக்கும் சைட்டிலேயே கம்பிகளை வெட்டுவதால் நிறைய கம்பிகள் வீணாவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதாவது பழைய முறையில் 5 சதவீதம் வீணாகும் எனக் கொண்டால் இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் 1.5 சதவீதம்தான் வீணாகும்” என்கிறார் அவர்.
பழைய முறையில் ஒரு கட்டிடக் கட்டுமானத்திற்கான கம்பிகளை நம்மால் உத்தேசமாகத்தான் கணக்கிட முடியும். அதனால் கம்பிகள் கட்டுமானத்திற்குப் பிறகு மிஞ்சி வீணாகவும் வாய்ப்புண்டு. இந்தப் புதிய முறையில் ரெடிமேட் கம்பி கொடுக்கும் நிறுவனமே அதை உருவாக்கித் தருவதால் கம்பி வீணாவதும் தடுக்கப்படும்.
கட்டிடப் பணியிடத்திலேயே வேலையை மேற்கொண்டால் அது மற்ற வேலைகளுடன் ஒரு பகுதி வேலை என்பதால் அதற்குத் தனிக் கவனம் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வேலை அவர்களைப் பொறுத்தவரை தனியானது. அதனால் அதைச் சிறப்பாகவும் கவனமாகவும் செய்வார்கள். தேவைப்படும் நேரத்தில் உடனடியாகக் கம்பிகள் கிடைக்கும். ஒப்பீட்டளவில் பார்த்தால் விலையும் சிக்கனம்தான். கம்பிகளை வெட்ட, வளைக்க, கட்ட வேலையாட்களைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

செங்கலுக்கு மாற்றான ஏ.சி.சி. கற்கள்


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் புதிது புதிதான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் களம் அமைத்துத் தந்தது. கட்டுமானத் துறையிலும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் ஏ.சி.சி. கற்கள் (Autoclaved Aerated Concrete Blocks). 1924-ம் ஆண்டு ஜோகன் ஆக்செல் எரிக்ஸன் என்னும் சுவீடன் நாட்டுக் கட்டிடக் கலை வல்லுநர் இதைக் கண்டுபிடித்தார். அந்தக் காலத்தில் மரங்களே கட்டுமானப் பொருளாக அதிகமாகப் பயன்பட்டுவந்தன. அதற்கு மாற்றாக ஒரு பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி அவர் இந்த ஏ.சி.சி. கற்களைக் கண்டுபிடித்தார். இந்த வகைக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்ட உடனே பெரும் வரவேற்பைப் பெற்றன.
சாம்பல் (அல்லது கிரானைட் துகள்கள்), ஜிப்ஸம், சிமெண்ட் ஆகியவற்றுடன் நீர் கலந்து ஒரு கலவை முதலில் உருவாக்கப்படுகிறது. இந்தக் கலவையுடன் 0.05 சதவீதத்திலிருந்து 0.08 சதவீத அளவுக்கு அலுமினியப் பவுடர் கலக்கப்படுகிறது. நம்முடைய நாட்டில் அனல் மின் நிலையத்தில் கிடைக்கும் அதிகப்படியான சாம்பல் கழிவுகளை ஏ.சி.சி. கற்கள் தயாரிப்பில் கிரானைட் துகள்களுக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள்.
கலவையுடன் அலுமினியப் பவுடர் இணைந்து வேதிவினை புரிவதால் கலவையின் எடை குறைகிறது. அலுமினியக் கலவையில் உள்ள கால்சியம் ஹைட்ராக்ஸைடுடன் நீர் வேதிவினை புரிந்து ஹைட்ரஜனை உண்டாக்குகிறது. இந்த ஹைட்ரஜன் வாயுவால் கலவையில் 3 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட குமிழ்கள் உண்டாகின்றன. மறுபடியும் மேற்கொள்ளப்படும் தயாரிப்பு முறையில் ஹைட்ரஜன் வாயு வெளியேறி, அந்தத் துளைகளில் காற்று வந்து அடைந்துகொள்கிறது. இந்தக் காற்றுக் குமிழ்களால் கலவையின் எடை குறைந்துவிடுகிறது.
அடுத்ததாக லேசாக்கப்பட்ட கலவை ஆட்டோகிளைவ் சேம்பரில் வைக்கப்பட்டு 190 டிகிரி வெப்பநிலையில் நீராவி செலுத்தப்படுகிறது. கால்சியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் சிலிகா ஹைட்ரேட் ஆக மாறி, உறுதியாகிறது.
முதலில் ஐரோப்பாவில் மட்டும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இந்த வகைக் கற்கள், இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா, பஹ்ரைன், சீனா, இஸ்ரேல், அமெரிக்காவிலும் இந்த வகைக் கற்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகைக் கற்கள் செங்கல்லைக் காட்டிலும் மிகவும் எடை குறைவானது. அதாவது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எடை உடையது. சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் கட்டப்படும் பல அடுக்குக் கட்டிடங்களுக்கு எடை மிகக் குறைவாக இருப்பதால் இந்த வகைக் கற்கள் ஏற்புடையதாக இருக்கும். கையாள்வதற்கும் எளிது என்பதால் பணிகள் மிக விரைவாக நடப்பதற்கும் ஏதுவாக இருக்கும். இக்கற்களை எளிதாக உடைக்கலாம், துளையிடலாம். அதனால் வயரிங், பிளம்பிங், டெகரேஷன் செய்வதும் சுலபம். இன்றைய சுற்றுச் சூழலுக்கு ஏற்றவகையில் ஏ.சி.சி. கற்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு கட்டப்படுகின்றன.
நுண் துகளுடைய (Porous Structure) இதன் கட்டமைப்பு ஏ.சி.சி. கற்களுக்கு எளிதில் தீப்பிடிக்காத தன்மையைத் தருகின்றன. பாரம்பரியமாகப் பயன்பட்டுவரும் செங்கல் போல் கட்டுமானத்திற்குத் தகுந்தவாறு உடைக்க வேண்டிய அவசியமல்ல. மேலும் அப்படிச் செங்கல்லை உடைக்கும்போது வீணாகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் இந்த வகைக் கற்களை எளிதாகக் கட்டுமானத்திற்குத் தகுந்தவாறு வெட்டிக் கொள்ளலாம், கல்லும் வீணாகாது.
ஏ.சி.சி. கற்கள் அறையின் வெப்பத்தையும் குளிரையும் சமநிலையில் வைத்திருக்கும். லேசான எடை உள்ளதாக இருப்பினும் இந்தக் கற்கள் உறுதியானவை. அதனால் மழை நீர் கசிவு ஏற்பட வாய்ப்பில்லை.

Saturday 21 June 2014

சுற்றுச்சூழலுக்கு உகந்த அக்ரிலிக் அறைக்கலன்கள்

சுற்றுச்சூழலுக்கு உகந்த அக்ரிலிக் அறைக்கலன்கள்

undefined

கட்டுமானத் துறையில் அடுத்தடுத்துப் பல மாற்றுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. மரபாக உபயோகித்து வந்த பொருட்களுக்கான மாற்று இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானது. தொழில்நுட்பம் வளர்ச்சிதான் பாகுபாடுகளைக் களைந்தது எனலாம். அந்த வகையில் இப்போது பரவலாக உபயோகிக்கப்பட்டு வரும் புதிய மாற்றுப் பொருள் அக்ரிலிக்.
மர மேஜை/இருக்கைகளுக்கு மாற்றாக காங்கீரிடிலேயே மேஜைகள்/இருக்கைகள் செய்யப்பட்டன. அடுத்ததாக பிளாஸ்டிக் மேஜைகள்/இருக்கைகள் வந்தன. தற்போது இந்த அக்ரிலிக் என்னும் புதிய பொருளில் இருக்கைகள் வந்துள்ளன. இவை பிளாஸ்டிக் அறைக்கலன்களுக்குச் (Furniture) சரியான மாற்று எனலாம்.
இது பாலிமரை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள். முதன் முதலாக 1941ஆம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. இவை இழையிழையாகத் தயாரிக்கப்பட்டு, காலணிகளிலும், ஸ்வெட்டர்களிலும் கையுறைகளிலும் லைனிங் பொருளாகப் பயன்பட்டு வந்தது. தற்போது உள் தடுப்புச் சுவர்களாகவும் அறைக்கலன்களாகவும் இந்த அக்ரிலிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அக்ரிலிக், கண்ணாடியைப் போல பளபளப்பும் ஒளியைக் கடத்தும் இயல்பும் கொண்டது. அதே சமயம் ஃபைபரை விட வலிமையாது. இவற்றை மிக எளிதாக அறுக்க முடியும். அதனால் அக்ரிலிக் தடுப்புகள் வீட்டின் அளவுக்கு ஏற்றாற் போல் வெட்டிப் பயன்படுத்த ஏதுவானது. அக்ரிலிக் இப்போது மீன் தொட்டிகள் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கண்ணாடியைப் போல இருப்பதால் இவை உடைந்துவிடுமோ என அச்சப்படத் தேவையில்லை. இவை எளிதில் உடையாது. தடுப்புச் சுவர், அறைக்கலன்கள் மட்டுமல்லாது கதவு, ஜன்னலாகவும் அக்ரிலிக் பயன்படுத்தப்படுகிறது.
வீடுகளுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்றாலும் இப்போது அக்ரிலிக் பெரும்பாலும் அலுவலக இண்டியர்களுக்குத்தான் பயன்படுகின்றன.
சோஃபா, சாப்பாடு மேஜை, இருக்கைகள், அலமாரிகள், ஊஞ்சல் என இன்னும் பலவிதமான அறைக்கலன்கள் அக்ரிலிக்கால் செய்யப்பட்டு இப்போது விற்பனைச் சந்தைக்கு வந்துள்ளன. என்னதான் இம்மாதிரியான புதிய பொருட்கள் சந்தைக்கு வந்தாலும் மர அறைக்கலன்கள்தான் நீடித்த உழைப்பைக் கொண்டவை என ஆணித்தரமாக நம்புவோம். ஆனால் மர அறைக்கலன்களுடன் ஒப்பிட்டால் அக்ரிலிக் அறைக்கலன்கள் கையாள்வதற்கு எளிது. பொருட்செலவும் அதிகம் ஆகாது. மேலும் இது மறுசுழற்சிக்கு ஏற்றது. அதனால், சுற்றுப்புறத்திற்கும் உகந்தது.
அக்ரிலிக் அறைக்கலன்கள் தொழிற்சாலைகளிலேயே தயாரிக்கப்பட்டு வருவதால் அவை நேர்த்தியான வடிவமைப்புடன் இருக்கும். தயாரிப்பும் மேம்பட்டு இருக்கும். மேலும் இவை பராமரிப்புக்கும் எளிதானது. இந்தியாவிலேயே இப்போது அக்ரிலிக் அறைக்கலன்கள் தயாரிக்கப்படுகிறது. இதன் தேவை பெருகப் பெருக தயாரிப்பு நிறுவனங்களும் பெருகி விலையும் குறையும். மரங்கள் அறைக்கலன்களுகாக வெட்டப்படுவதும் குறையும்.

உங்கள் கான்கிரீட் கலவை தரமானதா?

உங்கள் கான்கிரீட் கலவை தரமானதா?


முன்பெல்லாம் நுட்பம் அறிந்த பணியாட்களால்தான் கான்கீரிட் கலவை செய்யப்படும். சிமெண்ட், ஜல்லி, மணல், நீர் போன்ற கலவையின் பகுதிப் பொருட்களைச் சரியான விகிதத்தில் கலப்பார்கள். இது பார்ப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும். நாமும் அதன் தரத்தை அறிய முடியும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. ஆட்களுக்குத் திண்டாட்டம். அதுபோல வேலையையும் விரைவில் முடிக்க வேண்டி உள்ளது. பெருநகரங்களில் இடப் பற்றாக்குறையும் உண்டு. இதைத் தவிர்க்கும் பொருட்டுக் கலவை இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுப் பரவலாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பெரிய கட்டிடப் பணிகளுக்கு ரெடிமிக்ஸையும் பயன்படுத்துகிறார்கள்.
இவ்வாறு இன்றைய தொழில்நுட்பத்தின்படி தயாரிக்கப்படும் கான்கிரீட் கலவையை நாம் பரிசோதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏனெனில் கான்கிரீட் கலவையில் சிமெண்ட், ஜல்லி, மணல், நீர் இவை எல்லாம் முறையான விகிதத்தில் கலந்திருக்க வேண்டும். இவற்றில் ஒன்று அளவு குறைந்தாலோ அதிகமானாலோ கான்கிரீட்டின் தரம் குறைந்துவிடும். அதுபோல ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை வெளியிடங்களில் தயாராகி எடுத்துக்கொண்டு வரப்படுகிறது. அதனால் அந்தக் கலவையின் தரத்தைக் கேட்டு உறுதிசெய்துகொள்வது அவசியம். கான்கிரீட்டின் தரம் குறைந்தால் கட்டிடத்திற்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.

மணல் விலை மேலும் குறையுமா?


புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதாலும் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையாலும் மணல் விலை சரிந்து வருகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் மணல் விலை சதுர அடிக்கு 70 ரூபாயிலிருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சதுர அடிக்கு 50 ரூபாயில் இருந்து 55 ரூபாய்க்குள் ஏற்றமும் இறக்கமுமாக இருந்துவருகிறது. தமிழக அரசு திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஊர்களில் புதிய மணல் குவாரிகளைத் தொடங்கியதும் மணல் விலை சரியத் தொடங்கியது.

“மணல் விலை சில இடங்களில் சதுர அடிக்கு 60 ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது பரவாயில்லை. நாங்கள் ஆற்றிலிருந்து மணல் லோடு எடுக்க 24 மணி நேரத்திற்குக் குறைவான கால நேரம் ஆகிறது. ஆனால் இன்னும் நாங்கள் டீசலுக்கு அதிகச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது” என்கிறார் மணல் விற்பனை முகவரான எஸ்.எஸ். மணி. இதனால் இப்போதுள்ள விலைக்கு மணலை விற்க முடியாத நிலையிலுள்ளனர். அதாவது அவர்களுக்கு 4 யூனிட்டுக்கு 20 ஆயிரத்திற்கு விற்க முடியாத நிலை. இது சென்ற ஆண்டு 30 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
மார்ச் மாத மத்தியில் தமிழக அரசு இரு மாவட்டங்களில் மணல் குவாரிகளைத் திறந்துள்ளது. அதிகரித்துவரும் மணல் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இருந்து மணல் விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு குவாரியில் இருந்தும் தினமும் 150 லாரிகளில் மணல் எடுக்கப்படுகிறது.
சில கட்டுமானப் பொறியாளர்கள் இங்கிருந்து பெறப்படும் மணலின் தரம் குறித்துப் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் சிமெண்ட் பூச்சுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. “வெகு தொலைவான மணல் குவாரிகளில் இருந்து வரும் மணல் லோடுகள் உண்மையிலேயே தரமற்றதாகத்தான் உள்ளன. ஆனால் முழுவதும் கட்டுமானத்திற்கு ஏற்றவை எனச் சொல்ல முடியாது” என்கிறார் பொறியாளர் எல்.ஆர்.குமார்.
பருவெட்டு மணல் செங்கல் இணைப்பிற்கு மட்டுமே ஏற்றவை. மெல்லிய ஆற்று மணல்தான் மேல் பூச்சுக்கு உகந்ததாக இருக்கும். மணல் குவாரிகளில் இருந்து வரும் மணல்களில் தரமற்றதன்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது ஒரு பெரிய பிரச்சினை அல்ல எனக் கட்டுமானச் சங்கப் பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவித்தார். மணல் விலை குறைந்ததற்கு முக்கியமான காரணம் மணல் தேவை குறைந்திருப்பதே. மேலும் மணல் விலை குறையும் எனப் பல கட்டுமான நிறுவனங்கள் நினைக்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டார்.
undefined




நாட்டின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. நாள் தோறும் பொருளாதாரத் தேவைகளுக்காக நகரத்திற்கு வந்திறங்கும் மக்களின் சதவிகிதமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதுபோலவே நகரின் இடநெருக்கடியும் வளர்ந்துகொண்டே போகிறது. ஆட்கள் வந்து குடியேறக் குடியேறச் சென்னையும் தன்னை விஸ்தரித்துக்கொண்டாலும் எல்லோருக்குமான நிம்மதியாக வாழ ஓர் இடம் வேண்டும். ஆனால் வாடகை வீட்டில் அந்த நிம்மதி கிடைக்காது. அது உண்டு உறங்குவதற்கான இடமாகத்தான் பார்க்கப்படுகிறது. அசலான வாழ்க்கை சொந்த வீட்டில்தான் இருக்கிறது. ஆனால் மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் சொந்த வீடு என்பது நடுத்தரமக்களைப் பொறுத்தவரை நிறைவேற முடியாத கனவுதான். சுதந்திர இந்தியாவில் 75-ம் ஆண்டுக் கொண்டாட்டத்திற்குள் குறைந்தபட்ச வீட்டுத் தேவை பூர்த்திசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான முஸ்தீபுகள் இப்போதே தொடங்கிவிட்டன எனலாம். பல முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் அதிரடித் திட்டங்களுடன் களத்தில் இறங்கியிருக்கின்றன. ஆம்! பத்து லட்சத்திலிருந்து அட்டகாசமான பட்ஜெட் வீடுகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்த உள்ளன. இந்தியாவின் முன்னணிக் கட்டுமான நிறுவனங்களான மகேந்திரா லைஃப் ஸ்பேஸ் நிறுவனம், டாட்டா ஹவுஸிங் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், உஷா பிரேக்கோ ரியாலிட்டி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பட்ஜெட் வீடுகளை உருவாக்கும் திட்டத்தில் களமிறங்க உள்ளன.
மும்பையிலும் சென்னையிலும் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் ஒரு முன்னோட்டமாக இருக்கும். இதைத் தொடர்ந்து வெவ்வேறு நிறுவனங்கள், இதே மாதிரியான பட்ஜெட் வீடு திட்டத்தை இந்தியாவின் பல நகரங்களிலும் முன்னெடுக்கக் கூடும்.
முதற்கட்டமாக மகேந்திரா லைஃப் ஸ்பேஸ் நிறுவனம் மும்பையின் புறநகர்ப் பகுதியான போயிசரில் பட்ஜெட் வீடுகளைக் கட்ட ஆரம்பித்துள்ளது. அந்தத் திட்டத்தில் இன்னொரு கட்டமாக சென்னையில் ஆவடிப் பகுதியில் பத்து லட்சத்திலிருந்து 20 லட்சத்திற்குள் வீடுகளைக் கட்டவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. Happinest என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் 420 - 600 சதுர அடிகள் கொண்ட வீடுகளை இந்நிறுவனம் கட்டவுள்ளது.
தமிழ்நாட்டையும் மகாராஷ்டிராவை யும் தேர்வுசெய்தது தற்செயலானது அல்ல. இந்த இரு மாநிலங்களும் தொழில் வளர்ச்சியுள்ள மாநிலங்கள். மேலும் இந்த இரு மாநகரங்களிலும் வீட்டுத் தேவை பல மடங்கு அதிகமாக உள்ளது. அதனால் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருட்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என மகேந்திரா லைஃப் ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 20 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரத்திற்குட்டப்பட்ட மாத வருமானம் கொண்ட குடும்பத்தினர்களுக்கு இந்தத் திட்டம் பொருத்தமானதாக இருக்கும். அவர்களைக் குறி வைத்தே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் சென்னைப் புறநகர்ப் பகுதியான ஆவடியில் 13 ஏக்கரில் பரப்பளவில் இந்தத் திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்படும். மும்பையில் ஆகஸ்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் 15 ஏக்கரில் பரப்பளவில் அமைய உள்ளது. இந்த இரு கட்டுமானத்தின் மூலம் மொத்தம் 2500 வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின்படி குறைந்த இடத்தில் வசதியான வீடுகள் ஏற்படுத்தித் தரப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நகருக்கு வெளியே அமைய உள்ள திட்டமாக இருந்தாலும் போக்குவரத்து வசதிகளைத் தங்கள் நிறுவனம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். அதாவது கட்டிடம் அமையவுள்ள இடத்தில் இருந்து குறைந்தது 4 கி.மீ. தொலைவில் ரயில் நிலையம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடுகள் 9 மாத கால இடைவெளிக்குள் கட்டி முடித்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த ஒவ்வொரு திட்டத்திலும் 1200-ல் இருந்து 1500 வீடுகள் வரை கட்டப்படும். இந்தத் திட்டங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் இது ரியல் எஸ்டேட் துறையில் பெரும் புரட்சியை உண்டுபண்ணும்.

Friday 20 June 2014


     Lecturer (Civil)


    Total No. of Posts : 1
    
    Educational Qualification : First class Bachelor's Degree

in Civil Engineering

for more details please click here

Assistant Engineer (Civil)

Assistant Engineer (Civil)
Pay Scale                       : Rs. 15,600 - 39,100/-
Essential Qualification  : Should posses a degree in civil engineering from a recognized university or institution
Total no. of Posts          :  15
Web Site                        : www.upsconline.nic.in

Saturday 14 June 2014

Concrete Technology



What is concrete?
          Concrete is a composite material. It is a mixture of cement, aggregate (fine and coarse) and water. It is mainly used for construction purpose.


List out the compositions in concrete?
   Cement.
   Fine aggregate.
   Coarse aggregate.
  Water.

நண்பர்களே....................

            கட்டிட பொறியியலின் அனைத்து தொழில் நுட்பங்களையும் நீங்கள் அறிந்து கொல்ல வேண்டுமென இந்த பக்கத்தை தொடங்கியுள்ளோம். இங்கு உங்களுக்கு தேவையான எந்த தகவல்களையும் நீங்கள் எங்களிடம் கேட்கலாம் அல்லது உங்களுக்கு  தெரிந்த தகவல்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். 
            இந்த முயற்சி வெற்றியடைய உங்களின் முழு ஆதரவும் எங்களுக்கு தேவை........